உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பழநி கோயிலில் ஆய்வு

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பழநி கோயிலில் ஆய்வு

பழநி; பழநி முருகன் கோயிலில் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பணியில் மெத்தனமாக இருந்ததாக அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார்.

பழநி கோயிலுக்கு ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் வருகை புரிந்தார். பழநி பெருந்திட்ட வளர்ச்சிப் பணியில் கொடைக்கானல் சாலை சந்திப்பில் ரூ.53.79 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அலங்கார நுழைவாயில், கிரி வீதியில் வின்ச் நிலையம் எதிரே அமைந்துள்ள ரூ.51.55 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட ராக்கால நந்தவனத்தை அமைச்சர் ரமேஷ், எம்.எல்.ஏ., ரவிமனோகரனுடன் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் வைக்கப்பட்ட பேனர்களில் பழநி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ரவிமனோகரன் படம், பெயர் இடம் பெறாததால் அ.தி.மு.க.,வினர் புகார் எழுப்பினர். இதுகுறித்து அமைச்சர் எம்.எல்.ஏ.,விடம் வருத்தம் தெரிவித்தார்.

அதன் பின் வின்ச் ஸ்டேஷனில் பக்தர்கள் காத்திருப்பு அறைக்கு சென்றார். அங்கு இருந்த தண்ணீர் குழாயில் தண்ணீர் வராதது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் அங்கு மற்றொரு தண்ணீர் குழாயில் வந்த தண்ணீரின் தரத்தை சோதித்தார். டி.டி.எஸ்., மீட்டரில் உள்ள தண்ணீரின் மதிப்பை அளவிட்டார். காத்திருப்பு அறையில் இருந்த பக்தர்கள் தெரு நாய்கள் காத்திருப்பு அறைக்குள் வருவதாக குற்றம் சாட்டினர். உடனடியாக அங்கு இருந்த தெரு நாய்களை விரட்ட பழநி நகராட்சி ஊழியர்களை வரவழைக்க உத்தரவிட்டார். மேலும் கோயில் கண்காணிப்பாளரை கண்டித்து டோஸ் விட்டார். காத்திருப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் வின்ச், ரோப்கார் நிலைய காத்திருப்பு அறைகள், விடுதிகள், ஆகியவற்றை ஆய்வு செய்தார். பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்து அங்குள்ள பொருட்களுக்கு காலாவதி தேதி குறித்து கேட்டறிந்தார். அதன் பின் கிரிவீதியில் நடந்து செல்லும் போது பொதுமக்கள் அவரிடம் மனுக்கள் அளித்தனர். கிழக்கு கிரி வீதியில் கோயில் பூங்கா மற்றும் கிரிவிதி பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பணியை துவங்கி வைத்தார். ரோப்கார் மூலம் பழநி முருகன் கோயில் சென்ற அமைச்சர், பொது தரிசன வழியில் இன்று சுவாமி தரிசனம் சுவாமி தரிசனம் செய்தார் அன்னதான கூடத்திற்கு பக்தர்களோடு வரிசையில் ஒரு மணி நேரம் காத்திருந்து அன்னதானம் உட்கொண்டார். அதன் பின் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

அவர் தெரிவித்ததாவது, "பழநி கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டோம். நிறைவடைந்த பணிகளை துவங்கி வைக்கப்பட்டுள்ளது. பழநி கோயிலில் கட்டப்பட்டு வரும் அன்னதான கூடம் கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. அன்னதானத்தின் தரம் ஆகியவை ஆய்வு செய்தோம். உலகப் புகழ்பெற்ற பழநி கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தோம். கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் பழநி கோயிலில் நடைபெற்ற செயல்பாடுகள் வியாபார நோக்கில் நடைபெற்றுள்ளன. அதனை மாற்றி பக்தர்கள் பயன்படக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முதல்வர் முடிவு செய்வார். அமைச்சர் என்ற முறையில் ஹிந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது. "என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !