கொல்லுார் மூகாம்பிகையை தரிசித்தார் கேரள முதல்வர்
உடுப்பி: தமிழக முதல்வர் விஜயை தொடர்ந்து, கேரள முதல்வர் சதீஷன், கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு நேற்று வந்து, தரிசனம் செய்தார். உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவின், கொல்லுாரில் உள்ள மூகாம்பிகை கோவில், பிரசித்தி பெற்ற தீர்த்த தலமாக விளங்குகிறது, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளின் நம்பிக்கைக்குரிய திருத்தலமாக மாறியுள்ளது. இதற்கு முன் பல்வேறு அரசியல் தலைவர்கள், பல மாநிலங்களின் முதல்வர்கள், இங்கு வந்து தரிசனம் செய்தனர்.
மூகாம்பிகையை தரிசித்தால், வெற்றி கிடைக்கும் என்பது, அரசியல் தலைவர்களின் நம்பிக்கையாகும். கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் நடக்கும் சண்டிகா யாகத்துக்குசிறப்பு சக்தி உள்ளதாக ஐதீகம். அரசியல் எதிரிகளை பணிய வைக்க, ஆட்சியில் ஏற்படும் இடையூறுகளை சரி செய்யவும், இங்கு யாகம் நடத்துவது வழக்கம்.தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய், சமீபத்தில் கொல்லுாருக்கு வந்து, மூகாம்பிகையை தரிசனம் செய்தார்.
கேரளாவின் புதிய முதல்வர் சதீஷன், இசட் – பிளஸ் பாதுகாப்புடன், நேற்று அதிகாலை மூகாம்பிகை கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்தார். சிறப்பு பூஜைகள் நடத்தினார். அவருக்கு கோவில் நிர்வாகம், சிறப்பான வரவேற்பு அளித்தது. கேரள முதல்வர் வருகை காரணமாக, கோவிலின் சுற்றுப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனினும், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் பார்த்து கொண்டனர். மூகாம்பிகையை தரிசித்த பின், முதல்வர் சதீஷன் சாலை வழியாக மங்களூருக்கு சென்றார். அங்கிருந்து விமானத்தில், திருவனந்தபுரம் புறப்பட்டார்.