உத்திரமேரூர் வேம்பாத்தம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் கோலாகலம்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் வேம்பாத்தம்மன் கோவிலில், ஆடி திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
உத்திரமேரூர், மேலாண்ட கொல்லைமேட்டுத் தெருவில், அமைந்துள்ள வேம்பாத்தம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழா, கடந்த 3ம் தேதி முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 7ம் தேதி காலை 5:00 மணிக்கு பந்தகால் நடுதல், 12:00 மணிக்கு பால் முனீஸ்வரன் பூஜை, மாலை 7:00 மணிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு ஜலம் திரட்டுதல், 11:00 மணிக்கு முத்துபிள்ளையார் கோவிலிருந்து பால்குடம் எடுத்தல், 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் வழங்கும் விழா நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு தீச்சட்டி எடுத்தல், இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர்.
காஞ்சிபுரம் கோட்ராம்பாளையம் தெருவில் தும்பவனத்தம்மன் கோவில் 21வது ஆண்டு ஆடித் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்வில் ஜலம் திரட்டுதலும், மறுநாள் உற்சவர் தும்பவனத்தம்மன் சிறப்பு அலங்காரத்திலும், நகரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3வது நாள் நிகழ்வாக நேற்று கூழ்வார்த்தல் மற்றும் கும்பம் படையலிடும் நிகழ்வு நடைபெற்றது.