சேத்தாண்டி வேடம் அணிந்து வினோத முறையில் நேர்த்திக்கடன்
கமுதி: கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கரியமல்லம்மாள் கோயிலில் வினோதமான முறையில் சேத்தாண்டி வேடம், சாக்கு அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மி அடித்தும் வந்தனர். 508 விளக்கு பூஜை நடந்தது. கோயில் முன்பு கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பின் வினோதமான முறையில் உடல் ஆரோக்கியம் பெற வேண்டி பக்தர்கள் களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய விதியில் ஊர்வலமாக நடனமாடி கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கரியமல்லம்மாளுக்கு பால், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
கமுதி சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாம்புல்நாயக்கன்பட்டி கிராம மக்கள் செய்தனர்.