உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கர்நாடகாவில் காவல் தெய்வமாக விளங்கும் சவுடேஸ்வரி புரதம்மா

கர்நாடகாவில் காவல் தெய்வமாக விளங்கும் சவுடேஸ்வரி புரதம்மா

கர்நாடகாவில் ஏராளமான அம்மன் கோவில்கள் உள்ளன. வெவ்வேறு அவதாரங்களில் அருள் பாலிக்கிறார். ஹாசனிலும் சக்தி வாய்ந்த அம்பாள், ‘சவுடேஸ்வரி புரதம்மா’ என்ற பெயரில் காவல் தெய்வமாக விளங்குகிறார்.


ஹாசன் நகரின் சாலகாமே பேரூராட்சியின், பீகனஹள்ளி கிராமத்தில் சவுடேஸ்வரி புரதம்மா கோவில் அமைந்துள்ளது. இது, 200 ஆண்டுகள் பழமையானது. சிலர் சவுடேஸ்வரி என்றும், சிலர் புரதம்மா எனவும் அழைக்கின்றனர். மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். ஹாசன் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சிறப்பு வழிபாடு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தங்கள் கஷ்டங்களை கூறி வேண்டுகின்றனர். கோவிலில் ஒரு சிறப்பு வழிபாடு உள்ளது. இதன்படி, தங்களின் கஷ்டங்கள், பிரச்னைகளை தாமிர தகட்டில் எழுதி, கோவிலில் கட்டுகின்றனர். இது போன்று கட்டினால், வேண்டியது கிடைக்கும். பிரச்னைகள் அகலும் என்பது ஐதீகம். புரதம்மா கோவிலுக்கு வந்தவர்கள், வெறுங்கையோடு திரும்ப மாட்டார்கள் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாகும்.


வேலை தேடுவோர், உடல் நிலை பாதிப்பால் அவதிப்படுவோர், திருமண தடை உள்ளவர்கள், வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொண்டவர்கள், புரதம்மா கோவிலுக்கு வந்து, பக்தியுடன் வேண்டுதல் வைத்தால் அனைத்தும் சரியாகும். அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள், திரையுலகத்தினரும் இங்கு வந்து, சவுடேஸ்வரியை தரிசனம் செய்கின்றனர். தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேறினால், கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். குறிப்பாக தேர்தல் நேரத்தில், அரசியல்வாதிகள் பெருமளவில் வருகின்றனர். இதற்கு முன், கோவிலில் ஆடு, பன்றிகளை பலி கொடுக்கும் சம்பிரதாயம் இருந்தது. இப்போது அது இல்லை. அமாவாசை நாளில் நள்ளிரவு இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். அந்த நாளில் அம்பாளுக்கு மிக அதிகமான சக்தி இருக்குமாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !