80 ஆயிரம் வண்ண மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த 32 அடி உயர விநாயகர்
திண்டுக்கல்; திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லில் ஆன உயரமான 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகரை சுற்றி 80 ஆயிரம் வண்ண வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் திண்டுக்கல் கோபாலசமுத்திரக்கரையில் ஸ்ரீ நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலை இங்கு மட்டுமே உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு நேற்று 13.09.26 மஞ்சள், சந்தனம், பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர் என 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவில் வளாகம் முழுவதும் காஷ்மீரில் விளையக்கூடிய செங்காந்தல் மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 80ஆயிரம் மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு, ஊதா, ரோஸ், வாடாமல்லி என பல வண்ண கலர்களால் ஆன கிஷாந்த் மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் வண்ண வண்ண கலர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பூந்தோட்டத்தின் நடுவே விநாயகர் வீற்றிருப்பது மிகவும் கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
அதேபோல் 1,1/2 அடி உயரத்தில் உள்ள வல்லப கணபதி, சங்கடகர சதுர்த்தி விநாயகர், நன்மை தரும் விநாயகர், கற்பக விநாயகர், வாயு கணபதி என 108 விநாயகர் அலங்கரிக்கப்பட்டு பூந்தோட்டத்தில் அமர்ந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. மேலும் கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் கோவில் வளாகம் முழுவதும் மின் ஒளியில் ஜொலி ஜொலித்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.