காலகாலேஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை விழா
ADDED :2 days ago
கோவில்பாளையம்: கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் பிரதிஷ்டை விழா நேற்று முன் தினம் மாலை முதற்கால கலச பூஜை மற்றும் பேரொளி வழிபாடுடன் துவங்கியது.
நேற்று காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால கலச பூஜை துவங்கியது. இதையடுத்து, மகா அபிஷேகம், பேரொளி வழிபாடு நடந்தது. விநாயகர், முருகப்பெருமான் ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
விழாவில் சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் பேசுகையில், பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில் பாடல் பெற்ற தலம் ஆகும். கோவில் வளாகத்தில், 63 நாயன்மார்கள் சிலை நிறுவ இந்து சமய அறநிலையத் துறை அனுமதி பெறப்பட்டுள்ளது. ராஜகோபுரம் கட்ட முயற்சி நடைபெற்று வருகிறது, என்றார்.
அறங்காவலர் குழு தலைவர் சிரவை நாகராஜ், அறங்காவலர்கள், துணை ஆணையர் சரவணன், உபயதாரர்கள் பங்கேற்றனர்.