திருப்பரங்குன்றத்தில் தீர்த்த உற்சவம்!
ADDED :4832 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனித் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று, தீர்த்த உற்சவம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர்.நேற்று காலை உற்சவர் சன்னதியில் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, சண்டிகேஸ்வரர், அஸ்தர தேவர் எழுந்தருளினர். உச்சி கால பூஜை முடிந்து, மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர், பல்லக்கில் அஸ்தர தேவர், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை ஆகியோர் சரவணப் பொய்கையில் எழுந்தருளினர்.பூஜைகள் முடிந்து, சிவாச்சார்யார்களால், அஸ்தர தேவர் சரவணப் பொய்கை தண்ணீருக்குள் கொண்டு செல்லப்பட்டு, பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீர்த்த உற்சவம் நடந்தது.