மண்ணை மலையாக்கும் கார்த்திகை திருவிழா!
மேலூர்: விவசாயம் செழிக்க வேண்டி, ஒவ்வொருவரும் கைப்பிடி மண்ணை எடுத்துப் போட, அந்த மண் மலையாக மாறி வருகிறது. மேலூர் அருகே கார்த்திகை தீப வினோத வழிபாட்டில் இதுவும் ஒன்று. மேலூரில் நரசிங்கம்பட்டியில் உள்ளது பெருமாள் மலை. இங்குள்ள முன்னமலை ஆண்டிச்சாமி கோயிலில், கார்த்திகை தின வழிபாடு நேற்று நடந்தது. அருகிலுள்ள ஓடையிலிருந்து, கைகளால் எடுத்து வரப்பட்ட மணலை பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீசி வழிபாடு செய்தனர். மணலுடன் உப்பு, மிளகு சேர்த்து வீசினால் விவசாயம் செழிக்கும் என்பது இம்மக்களின் நம்பிக்கை. வீசப்பட்ட கைப்பிடி மண் படிப்படியாக மலையாக மாறி வருகிறது. இரவில் பெருமாள் மலை மீது தீபம் ஏற்றப்பட்டது. மேலவளவு அருகில் உள்ள கருப்புக் கோயிலில், கற்களை வீசி வழிபடுவது வழக்கம். மலை உச்சிமீது ஏறும் பக்தர்கள், அங்கிருந்து கீழ் நோக்கி கற்களை எறிவர். செங்குத்தான இம்மலை மீது சென்று தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். ஆட்டுக்குளம் பெருமாள் மலையில் நேற்று இரவு, கல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது.