மாசாணியம்மன் கோவிலுக்கு ரூ.20.9 லட்சம் காணிக்கை!
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கையாக, 20 லட்சத்து 9 ஆயிரத்து 77 ரூபாய் பக்தர்கள் செலுத்தியுள்ளனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி பகுதியில் பிரசித்தி பெற்றது. வெளி மாவட்டங்களிலிருந்தும் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில், 16 நிரந்தர உண்டியல்களும்; இது தவிர, 6 தட்டு காணிக்கை உண்டியலும் வைக்கப்பட்டுள்ளன. மாதத்திற்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிரந்தர உண்டியலில், 16 லட்சத்து 45 ஆயிரத்து 396 ரூபாயும்; தட்டு காணிக்கை உண்டியலில், 3 லட்சத்து 63 ஆயிரத்து 681 ரூபாயும் பக்தர்கள் செலுத்தியுள்ளனர். தங்கம் 235 கிராமும், வெள்ளி 215 கிராமும் இருந்தது. உண்டியல் திறப்பு நிகழ்ச்சி, கோவில் இணை ஆணையர் அனிதா முன்னிலையில் நடந்தது. காணிக்கை எண்ணும் பணியில், 60க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.