புத்தாண்டு அமாவாசையில் பிறந்ததால் ஆண் குழந்தைக்கு ஆபத்து!
ADDED :4514 days ago
திருவள்ளூர்: அமாவாசையில் புத்தாண்டு பிறந்ததால், ஒரேயொரு ஆண் குழந்தை வைத்திருப்பவர்கள், பரிகாரம் செய்ய வேண்டும் என்ற வதந்தி, திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமாவாசை தினத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததால், ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டும் இருந்தால், அந்த குழந்தைக்கு ஆபத்து என்ற தகவல், திருவள்ளூரில் நேற்று பரவியது. இதற்குப் பரிகாரமாக, வீட்டு வாசலில் அரிசி மாவில் கோலமிட்டு, ஒன்பது பேருக்கு, சாக்லெட் வழங்க வேண்டும் எனவும், கூறப்பட்டது. இதனால், மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஒரு ஆண் குழந்தை மட்டும் வைத்திருப்பவர்கள், அரிசி மாவில் கோலமிட்டு, விளக்கு ஏற்றி, ஒன்பது பேருக்கு சாக்லெட் வழங்கினர்.