தோரணமலை கோவிலில் தைப்பூச விழா கோலாகலம்!
ADDED :4409 days ago
திருநெல்வேலி: தோரணமலை முருகன் கோவில், தைப்பூச விழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், தென்காசியில் இருந்து, அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ளது, தோரணமலை முருகன் கோவில். தைப்பூச தினமான, நேற்று காலையில், சுவாமிக்கு அபிஷேகமும், சப்த கன்னியர்களுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் சுமந்தும், காவடி தூக்கி வந்தும் நேர்த்திகடன் செலுத்தினர். ஊட்டி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமும், வள்ளியம்மாள்புரம் திருமுருகன் பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் ஆதிநாராயணன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.