காளஹஸ்தி சிவன் கோவிலில் விமரிசையான கைலாச கிரிவலம்
காளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோவிலில், மகா சிவராத்திரி பிரமோற்சவத்தின், 10வது நாள் கொண்டாட்டமாக, நேற்று, கைலாச கிரிவலம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான, திருக்கல்யாண உற்சவத்திற்கு வருகை தந்த முக்கோடி தேவர்களை, நன்றி தெரிவித்து, வழியனுப்பும் வகையில், சுவாமி மற்றும் அம்மன், நேரடியாக சென்று வருவதையே, கிரிவலம் என்பர்.நேற்று காலை, 10:00 மணி யளவில், சிறப்பு அலங்காரத்துடன், கோவில் அலங்கார மண்டபத்திலிருந்து, சுவாமியும், அம்மனும், கைலாச மலைகள் வழியாக கிரிவலம் சென்றனர். மலைகளில் செல்வதால், அம்பு, ஈட்டிகளுடன் கூடிய அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கிரிவலம் முடிந்து திரும்பும், சுவாமி அம்மனை, கோவில் அருகில் உள்ள, சுகப்பிரம்ம ஆசிரமம் அருகில், ஆயிரக்கணக்கான பக்தர்களுடன், வேதப்பண்டிதர்கள் எதிரில், சென்று, அழைத்து வந்தனர். அங்கு, சிறப்பு பூஜைகள் செய்தனர். பின், கோவிலை அடைந்து மீண்டும், நான்கு மாட வீதி களில், குதிரை வாகனத்தில், காளஹஸ்தீஸ்வரரும், சிங்க வாகனத்தில் ஞானப்பிரசூனாம் பிகை அம்மனும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.