மாமல்லபுரம் மயான கொள்ளை: பக்தர்கள் பரவசம்!
ADDED :4311 days ago
மாமல்லபுரம்: புதுப்பட்டினம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை விழா நடந்தது. புதுப்பட்டினத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மயான கொள்ளை உற்சவம், கடந்த 27ம் தேதி நடந்தது. அன்று காலை பந்தக்கால் நட்டு, பெண்கள் பால்குடம் சுமந்து, அம்மன் கங்கை கரைக்கு புறப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிஷேகத்துடன், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்று மாலை 6:00 மணிக்கு, அம்மன் அலங்கார ரதத்தில் எழுந்தருளினார். மயான கொள்ளை பகுதிக்கு பக்தர்கள் ரதத்தை இழுத்து சென்றனர். அங்கு மயான கொள்ளை உற்சவம் விமரிசையாக நடந்தது. பக்தர்கள் முதுகில் அலகு குத்தியும், அந்தரத்தில் தொங்கி, அம்மனுக்கு மாலை சார்த்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.