திருச்செந்தூரில் விசாக விழா: முருகனுக்கு தங்க கவசம்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1:30க்கு விஸ்வரூப தீபாராதனையும், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 2:30 மணிக்கு தீபாராதனையும், காலை 9:00 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடந்தது. முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதன்பின், மாலை 3:00 மணிக்கு ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு முனிக்குமாரர்களுக்கு சாபவிமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வேல் குத்தியும், காவடி எடுத்தும் ஆடி, பாடி வந்தனர். பலர் விரதமிருந்து, பாதயாத்திரையாக வந்தனர். அவர்கள், அதிகாலையில் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில், பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். உணவு தானியங்கள், கால்நடைகளை, முருகனுக்கு காணிக்கையாக வழங்கினர்.