கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :4128 days ago
கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, ஆறுமுகப்பெருமானுக்கு திருக்கல்யாணம், நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று அருள்பெற்றனர். கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் சன்னதியில், கடந்த, 27ம் தேதி லட்சார்ச்சனையுடன் சூரசம்ஹார விழா துவங்கியது. நேற்றுமுன்தினம் மாலை, கோவில் மடவிளாகம் வீதியில் சூரசம்ஹாரம் நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகன் அருள்பெற்றனர். நேற்று காலை வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலையில் ஆறுமுகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளி அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.