அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவசம்!
ADDED :4159 days ago
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மூலவருக்கு வெள்ளி கவசம் பிரதிஷ்டை விழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, முத்து பிள்ளைாயார் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால் குடங்களுடன், பஜார் வீதி வழியாக ஊர்வலமாக சென்று, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு, நாதஸ்வரம், மேள தாளம் முழங்க அம்மன் புகழ் பாடப்பட்டது. பின், அம்மனுக்கு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றி, வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு, அம்மனுக்கு கலச பூஜைகள் மற்றும் மூலவருக்கு வெள்ளிக்கவசம் பிரதிஷ்டை நடந்தது. இவ்விழாவில்,உத்திரமேரூர் மற்றும் அப்பகுதியை சுற்றி உள்ள நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.