ஆஞ்சநேயருக்கு தை மாத முதல் ஞாயிறு சிறப்பு பூஜை!
நாமக்கல் : ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு, தை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.நாமக்கல் நகரில், 18 அடி உயரத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் இருந்தும், வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் என, ஏராளமானோர் தினமும் வந்து ஸ்வாமியை வழிபட்டு செல்கின்றனர்.ஒவ்வொரு விசேஷ தினம் மற்றும் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. அதேபோல், அதன்படி, நேற்று தை முதல் ஞாயிறு பூஜை, வெகுவிமரிசையாக நடந்தது.அதிகாலை முதல், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.