உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் போடுதல் நிகழ்ச்சி!
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு கம்பம் போடப்பட்டது. கோவில் வளாகத்தில் சங்கல்பம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில், திருக்கம்பத்துக்கு சிறப்பு பூஜை செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. கும்பங்கள் அணிவகுத்துச் செல்ல, மேள, தாளத்துடன் மாரியம்மன் கோவிலுக்கு கம்பம் எடுத்துச் செல்லப்பட்டது; கோவில் கொடி மரம் முன், நடப்பட்டது. பின், பூவோடு வைத்து பூஜைகள் நடந்தன. அதன்பின், கம்பத்துக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் திருக்கம்பத்துக்கு, பால், புனித நீர் ஊற்றி வழிபட்டனர். செயல் அலுவலர் சங்கரசுந்தரேஸ்வரன், பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், கோவில் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, நாளை மதியம், 12:30 மணிக்கு, கொடியேற்றம், மதியம், 2:00 மணிக்கு பூவோடு துவக்க விழா நிகழ்ச்சி நடக்கின்றன.