தென்மாவட்டங்களில் பங்குனி உத்திரம் சாஸ்தா வழிபாட்டில் மக்கள் ஆர்வம்!
திருநெல்வேலி: தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்ற பங்குனிஉத்திர விழாவையொட்டி கிராம சாஸ்தா கோயில்கள் நேற்று களைகட்டின. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பங்குனி உத்திர சாஸ்தா வழிபாடு பாரம்பரியத்துடன் நடக்கிறது. சாஸ்தா எனப்படும் அய்யனார் வழிபாடு அனைத்து சமூகத்தினருக்குமானது. ஒரே கோயிலில் பல்வேறு சமூகத்தினரும் வழிபாடு நடத்துகின்றனர். தந்தை வழியில் பாரம்பரியமாக வழிபடுவதால் தங்களின் மூதாதையர்களின் உறவினர்களை இங்கு காண இயலும். பங்காளியான சொந்தபந்தங்களை ஆண்டுக்கு ஒருமுறை சந்திக்கும் வாய்ப்புள்ளது. நெல்லையில் நடுக்காடுடையார் சாஸ்தா, மருகால்தலையில் பூலுடையார்சாஸ்தா, பிரான்சேரி கரையடிமாடசாமி கோயில் போன்றவற்றில் ஏராளமான மக்கள் வழிபட்டனர். இந்த விழாவிற்காக வெளிமாநிலங்களில் வசிப்போரும் கூட உத்திரத்தன்று வழிபாட்டிற்கு வந்திருந்தனர். நேற்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு சாஸ்தா கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது. மாட்டுவண்டிகள், வேன்கள், கார்கள் என கோயில்களை நோக்கி மக்கள் சென்றவண்ணம் இருந்தனர்.