செண்பகவல்லியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில்பட்டியில் செண்பகவல்லியம்மன், பூவனநாத சுவாமிகள் கோயில் பங்குனி திருவிழா, ஏப்.,5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி , வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பல்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர்கள் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடந்தது. 9 ம் நாளில் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. காலை 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரங்களுடன், தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், கலெக்டர் ரவிக்குமார் தேர் வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்து பகல் 12 மணிக்கு நிலையை அடைந்தது. பத்தாம் நாளான ஏப்.,14ல் தீர்த்தவாரி நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை இணை கமிஷனர் அன்புமணி, நிர்வாக அதிகாரி பூவலிங்கம், தக்கார் அருணாச்சலம் ஆகியோர் செய்திருந்தனர்.