விருத்தகிரீஸ்வரர் கோவில் வசந்த உற்சவம் துவக்கம்!
ADDED :3846 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், 10 நாள் வசந்த உற்சவம் துவங்கியது. விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் வசந்த உற்சவம் 23ம் தேதி துவங்கி, 1ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, காலை ஆழத்து விநாயகர், சுவாமி, தயார், வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு வசந்த மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பஞ்சமூர்த்திகள் குளிர்ச்சியடைய வேண்டி, வசந்த மண்டப முகப்பு தொட்டியில் தண்ணீர் நிரப்பி, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது.