உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பர் துதி மாலை!

கருப்பர் துதி மாலை!

பூவிரி சோலையில் உலவிடும் தென்றலே
புயலென மாறுதல் போலே
காவிரி கொள்ளிடம் இருகரை நடுவினில்
கண்துயில் பொன் திருமாலே
கூவியே அழைக்கும் பக்தர்கள் வாழ்வில்
குறைகளும் பயங்களும் போக்க
காவல்நற் தெய்வம் கருப்பன் என்றே
காசினி இங்கு வருக!

முன்னோடி சப்பாணி உறங்காப் புளியடியான்
முதலான படைகள் சூழ
மின்னிடும் வாளது கையினில் ஏற்றியே
மக்களைக் காக்க வேண்டி
வெண்ணிறப் புரவி மீதுநீ ஏறியே
வாயுவின் வேகம் கொண்டு
கண்ணினை இமையது காப்பது போலவே
கருப்பனே காக்க வருக!

ஓங்கியே கையில் ஒளிரும் வாளுடன்
ஒருபெரும் புரவி ஏறி
வேங்கையைப் போல வீறுடன் பாய்ந்து
வினைகளை அகற்ற வேண்டி
ராங்கியப் பதியினில் எழுந்த தெய்வமே
ரங்கனே எங்கள் வாழ்வில்
தீங்கெலாம் நீங்கிட திருவது சேர்ந்திட
தீரனே இங்கு வருக!

கராமது கடித்திட கஜேந்திரன் துடித்திட
காத்திட்ட ஆதி மூலம்
வராதவோர் துன்பமும் வாழ்க்கையில் வரும்போது
வந்தெமைக் காக்கும் மூலம்
விராமதி வகையினர் வாழ்வது சிறந்தே
விளங்கிட வந்த மூலம்
இராங்கியப் பதியினில் கருப்பண்ணன் ஆதி
இடர் நீக்க இங்கு வருக!

தனியாத துன்பமே தாக்கிடும் வேளையில்
தயவுடன் உன்னை யழைத்தோம்
மணியோசை கேட்கவே மத்தளம் முழங்கவே
மன்னனே இங்கு வருக
பிணியது நீக்கிட பயமது போக்கிட
பிள்ளைகள் அழைத்த போது
பணியாரம் பாச்சோறு பள்ளயப் பிரியனே
பரியேறி இங்கு வருக!

இருட்டிலும் பகலிலும் வீட்டிலும் வெளியிலும்
எந்தவோர் இடந் தனிலும்
வெருட்டிடும் பேய்களை விரட்டிடும் உனது
வெள்ளிமணிச் சலங்கை ஒலியும்
கருத்தவோர் மீசையும் கன்னங்கள் மறைக்கவே
கையினில் வாளும் ஏந்தி
கருப்பரென ராங்கியப் பதியினில் உள்ளவா
காத்திட இங்கு வருக!

ஏவலொடு பில்லியும் சூனியம் யாவையும்
எதிர்வரும் வேளை தனிலே
காவலென வந்தெமைக் காத்திட வேண்டுமே
கருப்பனே என் ஐயனே
சேவல்நற் கொடியுடை சிங்கார வேலனின்
சீர்மிகு மாமன் தன்னை
ஆவலாய் அழைத்தோம் வாழ்வது காத்திட
ஐயனே இங்கு வருக!

ஆமையாய் மச்சமார் அவதாரம் செய்துமே
அதர்மங்கள் அழித்த கோவே
காமத்தாற் சீதையைக் கவர்ந்தவன் தலைகளைக்
களைந்திட்ட எங்கள் மாலே
ஊமைகள் பேசிட ஊனங்கள் மாறிட
உத்தமன் உன்னை அழைத்தோம்
தீமைகள் போக்கியே திருவது சேர்த்திட
தீரனே இங்கு வருக!

அண்டங்கள் நடுங்கிட அகிலமே ஆடிட
அடியவர் உடுக்கை ஒலிக்க
தண்டைகள் அதிரவே சலங்கைகள் குலுங்கவே
தாவியுன் குதிரை வரவே
சண்டாளப் பேய்களும் பிசாசுகள் யாவையும்
சடுதியில் ஓடி மறையும்
கண்ணணே அடியவர் கவலைகள் போக்கிடக்
கருப்பனாய் இங்கு வருக!

ஒன்பதோ டொன்றுமே அவதாரம் செய்துமே
உலகினைக் காத்த மாலே
துன்பங்கள் பெருகியே உலகினில் தருமம்
தூங்கிடும் வேளை தனிலே
இன்னொரு முறைநான் இப்புவி வருவேன்
என்று நீ கீதை சொன்னாயே
கண்ணனே குதிரையில் கருப்பனாய் ஏறியே
காத்திட இங்கு வருக.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !