ராஜராஜ சோழனின் 1,030வது சதய விழா
ADDED :3637 days ago
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1,030வது சதய விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது.உலகப் புகழ் பெற்று விளங்கும், தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய ராஜராஜ சோழன் பிறந்த நாளை, அவருடைய நட்சத்திர நாளான சதய தினத்தில், சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, 1,030வது சதய விழா, நேற்று துவங்கியது.காலையில், செந்தில்குமார் குழுவினர் மேள, தாளம் முழங்க, மங்கல இசையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. பின், சதயவிழா குழு தலைவரும், தஞ்சாவூர் எம்.எல்.ஏ.,வுமான ரங்கசாமி வரவேற்றார். கலெக்டர் சுப்பையன் தலைமை வகித்தார். பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே முன்னிலை வகித்தார்.தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் பாஸ்கர் தலைமையில், ராஜராஜன் போற்றிய திருமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இன்றும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.