குலசேகரப்பட்டினத்தில் மகிஷாசூரன் வதம் நிகழ்ச்சி!
துாத்துக்குடி :துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில், மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்தார். இந் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.மைசூருக்கு அடுத்தபடியாக தசரா விழா குலசேகரப்பட்டினத்தில் சிறப்பாக நடக்கும். தசரா விழா அக்.13 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.தினமும் முத்தாரம்மன் பல்வேறு கோலங்களில், பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தினமும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடந்தது. மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. இரவு 11.மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளினார். மகிஷாசூரன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் பகுதியில் காத்திருந்தான். அங்கு இரவு 12 மணிக்கு எழுந்தருளிய முத்தாரம்மன் முதலில் தன் தலையுடன் வந்த சூரனின் தலையை கொய்தார்.அதன் பின் சிங்கத்தலை, எருமைத் தலையாகவும், பின் சேவலாகவும் காட்சியளித்தான். அவனது தலைகளை கொய்து முத்தாரம்மன் வதம் செய்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் காளி வேடம், அம்மன் வேடம், என பல்வேறு மாறு வேடங்களுடன் வந்திருந்தனர். சூரனை வதம் செய்தபோது பக்தர்கள், திரண்டு ஆரவாரம் செய்தனர். முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நேற்று அதிகாலை கோயிலுக்கு முத்தாரம்மன் வந்து சேர்ந்தார். இதனை தொடர்ந்து காப்புகளை பக்தர்கள் களைந்தனர்.