அச்சன்கோவில் உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருநெல்வேலி: கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் உற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி காலையில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி தங்க கொடிமரம் அருகே அருள் பாலித்தார். சபரிமலை தந்திரி கண்டரரு மோகனரரு தங்க கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தினார். தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பக்தர்கள் தங்க கொடிமரத்தைச் சுற்றி கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். புனலுாரில் இருந்து கொண்டுவரப்பட்ட திருஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.மாலையில் சிறப்பு நிகழ்ச்சி, சுவாமி சப்பர பவனி மற்றும் அன்னதானம் நடந்தது. கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா தொடந்து வரும் 27ம்தேதி வரை நடக்கிறது. தினமும் சிறப்பு பூஜைகள், காலை, மாலை சுவாமி எழுந்தருளல், கருப்பன் துள்ளல்,அன்னதானம் நடக்கின்றன. 25ம்தேதி தேேராட்டம் நடக்கிறது. தேரோட்டத்தின் போது கருப்பன் துள்ளலும் நடக்கிறது. 26ம்தேதி ஆராட்டு விழாவும், 27ம்தேதி மண்டல பூஜையுடன் உற்சவ விழா நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது. அச்சன்கோயில் கேரளத்தில் இருந்தாலும் தினமும் தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் அதிகளவில் சென்று வழிபடுகின்றனர்.