சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தேரோட்டம் கோலாகலம்!
சிதம்பரம்: நடராஜர் கோவிலில், மார்கழி ஆரூத்ரா மகா தரிசனம் உற்சவத்தையொட்டி, நடராஜ மூர்த்தி திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சிதம்பரம், சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு மார்கழி ஆருத்ரா மகா தரிசனம் உற்சவம், கடந்த 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை, காலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, இரவில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. ஆருத்ரா தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சிவகாமசுந்தரி சமேத நடராஜர் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று, காலை 5:30 மணிக்கு, ரத யாத்ரா தானம் புறப்பாடாகி, தேரில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்று, விநாயகர், சுப்ரமணியர், நடராஜ பெருமான், சிவகாமசுந்தரி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து திருத்தேரோட்டம் நடைபெற்றது.நாளை (26ம் தேதி) அதிகாலை 2:00 மணிக்கு, சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது.