சாமியார் மலையில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :3723 days ago
பந்தலுார்: பந்தலுார் அருகே அய்யன்கொல்லி சாமியார் மலையில் நடந்த, தொடர் சிறப்பு பூஜைகளில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில், 400 அடி உயரத்தில் சாமியார் மலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு, மூன்று நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான பூஜை, சுவாமி அருணானந்தகிரி ஆஸ்ரமத்தில், கடந்த மாதம், 31ல், காலை, 5:30மணிக்கு துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு பூஜைகள் செய்யப் பட்டு, புத்தாண்டு நாளில், அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி பூஜை, ஐயப்ப பக்தர்களின் பஜனை நடந்தது. பூஜைகளை சுவாமி ஓம்காரனந்தா, குருக்கள் பரமசிவம் தலைமையிலான குழுக்கள் செய்திருந்தன. தொடர்ந்து, நேற்றுவரை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக பங்கேற்றனர்.