திருப்பதிக்கு ஆன்மிக பயணம்: கிராமத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
தர்மபுரி: தர்மபுரி அருகே, கிராம மக்கள் ஆன்மிக பயணமாக திருப்பதிக்குச் சென்றதால், அந்த கிராமத்தில் திருட்டு சம்பங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி அடுத்த முக்கல்நாயக்கன் பட்டி, நரியன்கொட்டாய், மே.கன்னியம்பட்டி, காந்திநகர் கீழ்ராஜதோப்பு, மேல்ராஜாதோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்டுக்கு ஒரு முறை விவசாயம் செழிக்கவும், ஊர் பொதுமக்களின் நல்வாழ்வுக்காவும், திருப்பதிக்கு ஆன்மிக பயணம் சென்று வந்தனர். இந்த பயணம் கடந்த, 15 ஆண்டுகளாக தடை பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், இப்பகுதியில் உள்ள நரசிம்மர் கோவிலில், கிராமத்தினர் அருள்வாக்கு கேட்டனர். அப்போது, கிராம மக்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வரும்படி கூறப்பட்டது. இதையடுத்து, இந்த கிராமத்தில் உள்ள, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 15 பஸ்களில் நேற்று காலை திருப்பதிக்கு சென்றனர். கிராமங்களில் உள்ள பெரும்பாலான மக்கள், திருப்பதிக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளதால், அதியமான்கோட்டை போலீசார், அந்த கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.