உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனை வழிபட்டால் தண்ணீரிலும் விளக்கெரியும்: சொற்பொழிவில் பேச்சு

சிவனை வழிபட்டால் தண்ணீரிலும் விளக்கெரியும்: சொற்பொழிவில் பேச்சு

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், பெரியபுராண தொடர்சொற்பொழிவு, நேற்று மலையடிவாரம் ஆயிரவைசியர் திருமண மண்டபத்தில் நடந்தது. சென்னையை சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதாவது: திருநாவுக்கரசர் திருவாரூர் சென்றபோது, அங்கு சித்தொண்டராற்றி இறையருளை பூரணமாக பெற்ற நமிந்தியடிகளை புகழ்ந்து பாடியுள்ளார். ஆரூர் நறுமலர்நாதன், அடிதொண்டன் நம்பி, நந்தி நீரால் திருவிளக்கு நீள்நாடு அறியுமன் கற என்று, புகழ்ந்துள்ளார். இந்த நமிந்தியடிகள் செய்த தொண்டை காண்போம். திருவாரூருக்கு அருகில், தற்போது திருமபற்று என்று வழங்கும் ஊர், ஒரு காலத்தில் ஏமப்பேரூர் என வழங்கப்பட்டது. அவ்வூரில் சைவ அந்தண குலத்தில் அவதரித்தவர் நமிந்தியடிகள். சிறந்த சிவபக்தர். ஒருநாள் திருவாரூர் சென்று, அங்குள்ள தியாகேசப்பெருமான் கோவிலை ஒட்டி புறத்தே அமைந்திருந்த அறநெறி கோவிலில் வழிபடச்சென்றார். அங்கு விளக்கேற்றி வழிபாட செய்ய விரும்பினார். விளக்கெரிக்க எண்ணெய் வேண்டி, அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் யாசிக்க சென்றார். அவர் சென்ற வீடுகளில் வசித்தவர்கள் புறச்சமயவாதிகளான சமணர்களது வீடுகள் ஆகும். எண்ணெய் வழங்க மறுத்ததுடன் அவரயும் பரிகசித்து, கையில் நெருப்பை சிந்திய உங்கள் கடவுளுக்கு விளக்கெதற்கு, விளக்கு எரிக்க விரும்பினால், நீர் ஊற்றினாலே எரியுமே என்றனர்.

இதனால் மனம் நொந்து போன நமிந்தியடிகள், சிவபெருமானிடம் தன் மனவருத்தத்தை தெரிவித்தார். அப்போது இறைவன் அசரீரி வாயிலாக அவர்கள் பரிகசித்ததை நிஜமாக்கி காட்டுங்கள். இங்குள்ள குளத்து நீரை முகர்ந்து கொண்டு வந்து எரிப்பாயாக என, தெரிவித்தார். அதுபோல் செய்யவே விளக்கு எரியக்கண்டு சமணர்கள் அதிசயத்து நாணி தலைகுனிந்தனர். நமிந்தியடிகள் ஒருமுறை மணலி கிராமத்துக்கு எழுந்தருளிய தியாகேசரை தரிசிக்க சென்றபோது, பொதுமக்கள் அங்கு பெருந்திரளாக குழுமியிருந்தனர். பலரோடும் தோள் உரசியதால், இரவில் பூஜை செய்ய தமது தூய்மை கெட்டு விட்டதாக எண்ணி ஸ்நானம் செய்ய முயன்றார். அப்போது இறைவன் அவர் கனவில் தோன்றி, திருவிழாவில் கூடிய ஜனங்கள் எல்லோரும் சிவகணங்களே என்று அறிவுறுத்தினார். இதனால் அஞ்ஞானம் நீங்கியது. மறுநாள் காலை திருவாரூர் சென்ற அவரது கண்களுக்கு அனைத்து மக்களுமே சிவகணங்களாகவே தோற்றமளித்தனர். வாழ்நாள் முழுவதும் அவரது சிவத்தொண்டு தொடர்ந்தது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !