ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கும்பாபிஷேகம்-சுடுபவனையே சுட்டவள்!
ராமர் சிவனை வழிபட்ட தலமான ராமேஸ்வரம் ராமாயண காலத்திலேயே தோன்றியதால் இது பழமை மிக்கதாக திகழ்கிறது. கோவிலுக்கு நேராக உள்ள கடல், அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. இலங்கையில் இருந்த சீதை தன் கற்புத் தன்மையை நிலைநாட்ட நெருப்பு மூட்டி அதில் இறங்கினாள். நாம் தீயில் இறங்கினால் கருகிப் போவோம். ஆனால், சீதையின் கற்புத்தீ அக்னி தேவனையே சுட்டது. அலறி ஓடிய அக்னிதேவன் ராமேஸ்வரம் கடலில் குளித்து உஷ்ணத்தைப் போக்கிக் கொண்டான். அவனது பெயரால் இந்தக்கடலுக்கு அக்னி தீர்த்தம் என்றபெயர் ஏற்பட்டது. பெயருக்கேற்ப இந்த தீர்த்தம் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும். அக்னி தீர்த்தத்தில் குளித்தால் பாவம் தீரும் என்பதால், அலையோ ஆழமோ இல்லாத அமைதியான கடலாக இயற்கையாகவே அமைந்து விட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை குளத்தில் குளிப்பது போல நீராடி மகிழ்கிறார்கள். எந்த நேரமும் குளிக்கலாம் என்றும் தல புராணம் கூறுகிறது. இந்த தீர்த்தத்தில் ஆதிசங்கரர் நீராடி, ராமநாதரை வழிபட்டுள்ளார். இதன் நினைவாக கடற்கரையில் கோவில் ஒன்றுள்ளது. இங்கு ராமநாதர் உள்ளிட்ட பன்னிரு ஜோதிர்லிங்கங்கள், ஆதிசங்கரர் சன்னிதிகள் உள்ளன. இக்கடலில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியமாக கருதப்படுகிறது. இந்த புண்ணியத்தலத்தின் கும்பாபிஷேகத்தை காண இருப்பது நாம் செய்த பெரும் பேறாகும்.