திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் நேற்று தீர்த்தவாரி விழா கோலாகலமாக நடந்தது. இதில் பரிக்கல் லட்சுமிநரசிம்மர், ஆலங்குப்பம் பாண்டுரங்கன், அங்காளம்மன், பேரங்கியூர் கோதண்டராமர், சாமுண்டீஸ்வரி அம்மன், ஆ.நத்தம் வைகுண்டவாசப்பெருமாள், மேலமங்கலம் ஆதிகேசவப்பெருமாள், கீரிமேடு மாரியம்மன் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து சுவாமிகள் ஆற்றிற்கு கொண்டு வரப்பட்டன. பகல் 12:30 மணியிலிருந்து வரிசையாக சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. பின், அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.பாதுகாப்பு பணிகளை டி.எஸ்.பி., சங்கர், இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊராட்சித்தலைவர் வேலாயுதம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
கவலை: தென்பெண்ணையாற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் தீர்த்தவாரியில் பங்கேற்றதால் விழா கோலாகலமாக நடந்தாலும், ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் மக்கள் கவலையடைந்தனர்.