காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் தேரோட்டம்!
ADDED :3548 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில், தேர் திருவிழா வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் பிரமோற்சவம், கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பெருமாள் காலை, இரவு, வேளைகளில் ராஜவீதிகள் சுற்றி வருகிறார். நேற்று, தேரோட்டத்தை முன்னிட்டு, காலை 6:00 மணியளவில் கோவிலில் இருந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். காலை 8:00 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜ வீதிகளில் சுற்றி வந்து காலை 10:30 மணிக்கு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. இதை தொடர்ந்து, மாலை 5:00 மணியளவில், பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6:00 மணியளவில் கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.