ப.வேலூர் பகவதியம்மன் கோவில் மரத்தில் அதிசயம்
ப.வேலூர்: ப.வேலூர் சுல்தான்பேட்டையில் பகவதியம்மன் கோவில் வளாகத்தில் வேப்பமரத்தில் சுவாமி உருவம் தெரிந்ததால், பக்தர்கள் அதிசயத்துடன் பார்த்து வழிபாடு நடத்தினர். ப.வேலூர் சுல்தான்பேட்டையில் பகவதியம்மன் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் மாலை, 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கோவில் வளாகத்தில் உள்ள அரச மரம், வேப்பமரம் இரண்டும் இணைந்துள்ள பகுதியில், வேப்பமரத்தில் அம்மன் உருவம் தெரிவதாக பக்தர்கள் கூறியதை தொடர்ந்து. இதை பார்க்க ஏராளமான பொதுமக்கள் கோவிலில் குவிந்தனர். மேலும் சுவாமி உருவம் தெரிந்த வேப்பமரத்திற்கு சிவப்பு சேலை கட்டி பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். அங்கு சாமி கும்பிடவந்த பெண்மணிக்கு அருள்வாக்கு வந்து பகவதியம்மன் இந்த மரத்தில் குடியிருப்பதாக கூறினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளான தெற்கு நல்லியாம்பாளையம், சக்ரா நகர், சக்தி நகர், பொத்தனூர், பாண்டமங்கலம் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.