பாதுார் பிரத்தியங்கிராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்!
உளுந்துார்பேட்டை: பாதுார் பிரத்தியங்கிராதேவி கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, நிகும்பலா யாகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுார் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கிராதேவி கோவிலில், பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, நிகும்பலா யாகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு, சிறப்பு யாகம் துவங்கியது. யாககுண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்க ப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் செல்லம்மாள் அருணாச்சல குருக்கள் தலைமையில் மோகனசுந்தரம், ராஜா, சின்னப்பா, ஜெயக்குமார், கணேஷ், சரவணன், கார்த்திக் ஆகியோர், வேத மந்திரங்களை முழங்கி, யாகம் வளர்த்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் குறித்து வெற்றிலையில் எழுதி, யாக குண்டத்தில் கொட்டினர். பின், மகா தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி, அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கிராதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.