கொக்காம்பாளையம் கோவில் தேர் திருவிழா
ADDED :3545 days ago
மங்கலம்பேட்டை: கொக்காம்பாளையம் கோவில் தேர் திருவிழாவில் ஏராமளானோர் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மங்கலம்பேட்டை அடுத்த கொக்காம்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக 21ம் தேதி தேர் திருவிழாவையொட்டி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 1:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணியளவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் படித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில், அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.