குப்பைத் தொட்டிக்கு அருகே கோவில் தேர் நிறுத்தம்
திருவொற்றியூர்: பெருமாள் கோவில் தேர், குப்பை கொட்டும் இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், கோவில் நிர்வாகத்தின் மீது பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். திருவொற்றியூர், காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ராஜகோபுர பணிகள் நடந்து வருவதால், கடந்த எட்டு ஆண்டுகளாக, கோவிலில் தேரோட்டம் நடக்கவில்லை. இதனால், எட்டு ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ள தேரை, கோவிலில் இருந்து, 300 மீட்டர் துாரத்தில் உள்ள, வன்னியர் தெருவில், குப்பை தொட்டி அருகே நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ஏரளமாக இருந்தும், குப்பை தொட்டியின் அருகே தேரை நிறுத்தியுள்ளனர். மேலும், தேரை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திறந்த வெளியில் தேரை நிறுத்தியுள்ளதால், அதிலிருந்த வெண்கல மணிகள் மாயமாகியுள்ளன. கோவில் நிர்வாகம் வீணாகி வரும் தேரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.