உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கிருத்திகை விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருத்தணி கிருத்திகை விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருத்தணி : முருகன் கோவிலில், நேற்று நடந்த புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று புரட்டாசி மாத கிருத்திகையை ஒட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரண அலங்காரம் சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகன் பெருமானுக்கு பால், பன்னீர், விபூதி மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், தமிழகம், ஆந்திராவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்திருந்து, மூலவரை தரிசிக்க, பொது வழியில் இரண்டு மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !