மயிலம் கோவிலில் கிருத்திகை விழா
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை விழா நடந்தது. மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில், கிருத்திகை விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, வழிபாடுகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. பெண்கள், குழந்தைகள் அலகு குத்தி, நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு 8:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் நடந்த வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கிரிவல நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி மேற்பார்வையில், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.