உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத்திருவிழா கோலாகலம்!

மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத்திருவிழா கோலாகலம்!

மதுரை: மதுரை மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ஒரு மாத கால தாமோதர தீபத்திருவிழா அக். 16ல் கோலகலமாக துவங்கியது.  ஒவ்வொரு வருடமும் தாமோதர தீபத்திருவிழா என்ற விழாவை இஸ்கான் உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறது. இவ்விழாவின் சிறப்பம்சம் என்னவெனில், பக்தர்களே நேரடியாக சுவாமிக்கு தீப ஆரத்தி காட்டலாம் என்பதே ஆகும்.

மதுரையில் இவ்விழா, மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் நேற்று அக்டோபர் 16ம் தேதி முதல் துவங்கியது. துவக்க நாளை முன்னிட்டு ராதா மதுராபதி, தாமோதர தீப அலங்காரத்தில் எழுந்தருளினார். சுவாமி சன்னதி முழுவதும் நெய் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணருக்குப் தீப ஆரத்தி காட்டினர். விழாவின் சிறப்பம்சம் என்னவென்றால், இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் தங்கள் கரங்களால் நேரடியாக பகவான் கிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டலாம். தினமும் காலை 6.30 மணியளவில் நடைபெறும் இவ்விழா நவம்பர் 14ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறும். தாம என்றால் கயிறு. உதர என்றால் வயிறு. பகவான் கிருஷ்ணரை, அன்னை யசோதா தேவி கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டு இந்தத் தமோதர தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடந்த இடமும், கிருஷ்ணர் வளர்ந்த இடமுமான டெல்லிக்கு அருகில் உள்ள கோகுலத்தில் இவ்விழா ஒரு மாத காலம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில்களிலும், கோகுலத்தில் கொண்டாப்படுவதைப் போல ஒரு மாத காலம் இவ்விழா அனுசரிக்கப்படுகிறது.

பகவான் கிருஷ்ணர் காலிய நாகத்தின் மீது நடனமாடியது, நரகாசுரனை வதம் செய்தது, கோவர்த்தன கிரி மலையை சுண்டு விரலால் தூக்கி குடையாகப் பிடித்தது உள்ளிட்ட கிருஷ்ணரின் பெரும்பாலான தெய்வீக லீலைகள் இம்மாதத்தில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தீப ஆரத்தியின் போது கோகுலத்தில் பாடப்பெறும் பகவான் கிருஷ்ணரின் குழந்தைப் பருவ சாகசங்கள் நிறைந்த புகழ் பெற்ற பாடலான தாமோதரஷ்டகம் என்ற பாடல் பாடப்பெறும். இப் பாடல் கேட்போரின் மனதிற்கு மிகவும் இனியதாக அமையும். அதுமட்டுமல்லாது, தாமோதரரான கிருஷ்ணரை இப்பாடல் மிகவும் கவரக் கூடியது. வேத சாஸ்திரங்கள், யார் ஒருவர் தினசரி நெய் விளக்கு தீபம் காட்டுகிறாரோ அவரிடமிருந்து பல லட்சக்கணக்கான கல்பங்களில் செய்யப்பட்ட பாவங்கள் கூட நீங்கி விடுகின்றன என்று குறிப்பிடுகிறது. எனவே மக்கள் நலன் கருதி நடத்தப்படும் இந்த தாமோதர தீபத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !