உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 12ம் தேதி திறப்பு

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 12ம் தேதி திறப்பு

சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 12-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு திறக்கிறது. புதிய கொடி மரம் அமைப்பதற்காக 17-ம் தேதி தற்போதைய கொடி மரம் அகற்றப்படுகிறது.மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து கடந்த மாதம் 20-ம் தேதி காலை அடைக்கப்பட்ட சபரிமலை நடை 12-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு மீண்டும் திறக்கிறது. மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். 13-ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார்.தொடர்ந்து வழக்கமான கணபதிஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை, உதயாஸ்தமனபூஜை, சகஸ்ரகலசம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 17-ம் தேதி வரை எல்லா நாட்களில் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெறும்.

இங்கு தற்போதுள்ள கொடிமரம் பழுதடைந்துள்ளதால் புதிதாக தங்க கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தேக்கு மரம் மூலிகை எண்ணெய்யில் பதப்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து வரும் 17-ம் தேதி தற்போதைய கொடி மரம் அப்புறப்படுத்தும் பணி தொடங்குகிறது. அன்று காலை 10 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் பணிகள் தொடங்கும். ஜூன் 25-ம் தேதி புதிய கொடிமரம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !