பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடப்பது சந்தேகம்
ADDED :3274 days ago
தாரமங்கலம்: தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம், பிப்ரவரியில் இருந்து, தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 21 ஆண்டுகள் ஆகிறது. மூன்று ஆண்டுகளாக, கும்பாபிஷேகம் நடத்த பணிகள் நடந்தன. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், சங்ககிரி எம்.எல்.ஏ., ராஜா தலைமையில், கடந்த ஆண்டு, செப்., 13ல், கைலாசநாதர் கோவிலில் நடந்தது. அதில், 2017 பிப்ரவரியில், கும்பாபிஷேகம் நடத்தவும், விழா கமிட்டி அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிப்ரவரியில், இன்னும், 15 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையால், கும்பாபிஷேக விழா, மேலும் சில மாதங்கள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.