கோதண்டராம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் உலா
திருத்தணி: கோதண்டராம சுவாமி கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவாலங்காடு ஒன்றியம், நெடும்பரம் கிராமத்தில், திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், பங்குனி மாதம், ஸ்ரீராமநவமி பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம், 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. மாலை, 6:00 மணிக்கு ஒவ்வொரு வாகனத்தில் உற்சவ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் உற்சவர் சிம்ம வாகனத்திலும், நேற்று, கருட வாகனத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, யானை வாகனத்திலும், நாளை கருட சேவையில் பவனி வருகிறார். 6ல், புஷ்ப சேவையுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.