உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முயல் வேட்டை திருவிழா பெரம்பலூரில் வினோதம்

முயல் வேட்டை திருவிழா பெரம்பலூரில் வினோதம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில், 23 கிராமங்களில் முயல் வேட்டை எனும் வினோத திருவிழா நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில், ஆண்டுதோறும், சித்திரை முதல்
ஞாயிற்று கிழமை, முயல் வேட்டை எனும் வினோத திருவிழா நடப்பது வழக்கம். எசனை, குரும்பலூர் உட்பட, 23 கிராமங்களில், முயல் வேட்டை திருவிழா, நேற்று நடந்தது. மேற்கண்ட கிராமங்களில், வீட்டுக்கு ஒரு ஆண் வீதம், அந்தந்த கிராமத்தின் மாரியம்மன் கோவில்கள் முன், நேற்று காலை, 7:00 மணியளவில் கூடினர். பின், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் பூசாரிக்கு அருள் வந்து, வேட்டைக்கு செல்லும் திசை மற்றும்
வேட்டையின் போது, கிடைக்கும் முயல்களின் எண்ணிக்கை குறித்து, குறி சொல்லப்பட்டது. தொடர்ந்து, சிறுவர்கள், வாலிபர்கள், பெரியோர் என, 50க்கும் மேற்பட்டோர், குத்தீட்டி, உருட்டுக்கட்டை, வேட்டை நாய் ஆகியவற்றுடன் வேட்டைக்கு கிளம்பினர். மாலை,
4:00 மணி வரை, வேட்டையில் ஈடுபட்டு, வேட்டையாடிய முயல்களுடன், குறிப்பிட்ட பகுதியில் கூடினர். அவர்களது குடும்ப பெண்கள், அவர்களுக்கு உணவு மற்றும் புத்தாடையுடன், அப்பகுதிக்கு சென்றனர். வேட்டைக்கு சென்ற அனைவரும்  குளித்து, புத்தாடை அணிந்து, வேட்டையாடிய முயல்களை, குச்சிகளில் தோரணம் போல் தொங்க விட்டு, மேளதாளங்களுடன் ஆடிப்பாடியபடி, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். வேட்டையில் கிடைத்த முயல்கள் மற்றும் ஆடு ஆகியவை, சாமிக்கு படையல்
செய்யப்பட்டது. முயல் மற்றும் ஆட்டு கறி பங்கு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது.

துறைமங்கலம் கிராமத்தை சேர்ந்த சோலை கூறியதாவது: பல ஆண்டு காலமாக, இத்திருவிழா சித்திரை மாதம்  கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டையாடிய முயலை, சாமிக்கு படையலிட்டு பூஜை செய்த பின், அதை உண்பதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; உடல் நோய்கள் நீங்கும், மும்மாரி மழை பொழிந்து நாடு செழிக்கும் என்ற நம்பிக்கையிலும், இத்திருவிழா காலங்காலமாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில், சாமிக்கு பலியிடப்படும் முயல் மற்றும் ஆடு ஆகியவற்றின் ரத்தத்தை பூசாரி குடித்து சாமியாடுவார். அப்போது, பெண்களும், ஆண்களும் தரையில் படுத்து, கும்பிட்டு கொள்வர். பூசாரி ஒவ்வொருவராக
தட்டி எழுப்பி, அவர்களின் வேண்டுதல் குறித்தும், நிறைவேறுமா,  நிறைவேறாதா என்பது குறித்தும் குறி சொல்வார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !