அர்ச்சுனன் தபசு : பெண்கள் குழந்தை வரம் வேண்டி தவம்
திருத்தணி: மேல்திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி விழாவில், நேற்று, அர்ச்சுனன் பனை மரத்தில் ஏறி, தவம் புரிந்தான். அதே நேரத்தில் மரத்தின் கீழ் பெண்கள் குழந்தை வரம் தவம் புரிந்தனர்.மேல்திருத்தணி, திரவுபதியம்மன் கோவிலில், 61ம் ஆண்டு, தீமிதி திருவிழா, கடந்த, 4ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. மதியம், மகாபாரத சொற்பொழிவும், மாலையில் உற்சவர் அம்மன் வீதியுலாவும், இரவு, 10:00 மணிக்கு, மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது.கடந்த, 10ம் தேதி, பாஞ்சாலி திருமணமும், 12ம் தேதி சுபத்திரை திருமணம் நடந்தது. நேற்று, காலை, 10:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர் ஒருவர் அர்ச்சுனன் வேடமிட்டு பனை மரத்தில் ஏறி தவம் புரிந்தார். அதே நேரத்தில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தை வரம் வேண்டி, மரத்தின் கீழ் படுத்து தவம் புரிந்தனர். இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.