பழநியில் 20 அடி உயர கோபுர காவடியுடன் கேரளா பக்தர்கள் வழிபாடு
ADDED :3241 days ago
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 20அடி உயரமுள்ள கோபுரக்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பழநி மலைக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். ஆனி மாதபிறப்பை முன்னிட்டு கேரள மாநிலம் திருச்சூர் விநாயககுழுவை சேர்ந்த 20க்கு மேற்பட்ட பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்தனர். அதில் ஒருவர் 20அடி உயரம், 80கிலோ எடையுள்ள மயில் இறகுகள், வண்ண காகிதப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கோபுரக்காவடி எடுத்து வந்தார். இவர் கிரிவீதியில் மேளதாளத்துடன் ஆடிவந்தார். பாதவிநாயகர் கோயிலில் தரிசனம் செய்து, உயரமான காவடி என்பதால் படிப்பாதை வழியாக தோளில் சுமந்துசென்றார். மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தை வலம்வந்து மூலவரை வழிப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்.