சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?
அரூர்: அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை சென்னியம்மன் கோவிலில், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில், பிரசித்தி பெற்ற சென்னியம்மன் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய, மூன்று மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, ஆடி மாதம் பிறந்தவுடன், தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேர்த்தி கடனை செலுத்தும் வகையில், பக்தர்கள் தென்பெண்ணை ஆற்றில் உள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, பொரி தூவி, பூஜை செய்து வணங்குகின்றனர். பின், ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழா அன்று இக்கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. எனவே, வரும் ஆடிப்பெருக்கு விழாவிற்குள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர, வேடகட்டமடுவு பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கு பலியிடப்படும் ஆடு, கோழி ஆகியவற்றின் கழிவு, தலைமுடிகள் அனைத்தும், தென்பெண்ணையாற்றில் கொட்டப்படுவதால், ஆற்று நீர் மாசடைந்து வருகிறது. இதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.