குரு பக்தியின் மேன்மை!
ஆசார்யன் சம்பந்தமே அனைவருக்கும் மோட்ச காரணம் என்று வைஷ்ணவம் வலியுறுத்துகிறது. பெரும் பாவம் செய்த க்ஷத்ரபந்துவும், பெரும் புண்ணியம் செய்த புண்டரீகரும் மோட்சம் அடைந்தனர். இவர்களின் பாவமோ, புண்யமோ மோட்சத்தை அளிக்கவுமில்லை. தடுக்கவுமில்லை. பின் எவ்விதம் தான் அவர்கள் மோட்சமடைந்தனர். என்றால், ஆசார்யரின் சம்பந்தமேயாகும். ஆழ்வார்களும், ஆசார்யர்களும் இக்கருத்தை நன்கு வலியுறுத்துகின்றனர். ஏட்டளவில் இருந்த இக்கருத்தினை வசப்படுத்தி எல்லோருக்கும் புரிய வைத்த பெருமை ராமானுஜரையே சாரும். ஒரு சிஷ்யனாகவும், ஆசார்யனாகவும் விளங்கிய ராமானுஜர் குரு பக்தியின் மேன்மையை உலகுக்குணர்த்திய சம்பவங்கள் ஏராளம். இவரை ஒரு சிஷ்யனாகப் பார்ப்பதைவிட, ஆசார்யராகக் காணுங்கால், அனேகம் சிஷ்யர்களின் பெருமைதனை அறியலாம்.
ராமானுஜரின் திவ்ய சரித்திரத்தில் பல சீடர்களின் பங்களிப்பை பார்த்து வருகிறோமல்லவா! குருநாதரின் பெருமைக்கு தெய்வம் கூட ஈடாகாது என்பது அறிஞர் வாக்கு. குருவுக்கு சமமாகவோ, மேலாகவோ நாம் தெய்வத்தைக்கூட நினைப்பது தகாது. எனவே, குருவே மேலான தெய்வம்; குருவே மேலான கதி, வாழ்விக்கும் வைஷ்ணவம் இதை விளக்கும்போது நமக்கு மேனி சிலிர்க்கிறது. ராமானுஜரின் சீடர்களில் பல பெரியோர்கள் உண்டு. தங்களின் மேன்மையை விட, ராமானுஜரின் அடியராவதே பெருமை என்றுணர்ந்திருந்தனர். அவர்களில் ஒரு பெரியோர் மிளகாழ்வான். மிளகாழ்வான் எனும் இத்திருநாமமே சுவாரஸ்யமானது. மிளகுக்கும், இவருக்கும் அப்படியென்ன தொடர்பு இருக்க முடியும்? இவரென்ன வைத்தியரா? என்று தோன்றுகிறதே! தொடர்ந்து காணலாம். ராமானுஜருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்த மஹனீயர்கள் பலருண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் இந்த மிளகாழ்வானும் ப்ரணதார்த்திஹரர் எனும் கிடாம்பியாச்சானும். இதில் ப்ரணதார்த்திஹரர் எனும் கிடாம்பியாச் சான் திருக்கோட்டியூர் நம்பிகளாலேயே நியமனம் செய்யப்பட்டவர். அவர் கதை தனிக் கதை. அதைப் பின்பு காணலாம்.
மிளகாழ்வானும் மடைப்பள்ளி (அதாவது ராமானுஜருக்கு தனியாக சமையல் செய்வது) கைங்கர்யம் செய்து வந்தார். ராமானுஜர் காலை முதல் மாலை வரை இடையறாது சொற்பொழிவுகள் நிகழ்த்துவதுண்டு. இதனால், அவருக்குத் தொண்டை சற்றே கரகரத்துப் போகும். அதற்காக இரவினில் பால் அருந்துவது வழக்கம். வெறும் பாலாக அருந்து வதை விட, அதில் கற்கண்டு, மிளகு முதலியவற்றைச் சேர்த்து அருந்தினால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இப்படிப் பாலருந்துவது போகத்துக்காக இல்லையெனினும், தேகத்தை ஸம்ப்ரதாய பிரசாரத்துக்காக ரட்சிக்க வேணுமன்றோ! அதனால் சிறிது அருந்துவது வழக்கம். இந்த மிளகாழ்வான் வந்ததிலிருந்து ராமானுஜருக்கு பாலில் முழு மிளகு மிதந்தது. மிளகைப் பொடித்துப் போடுவதன்றோ வழக்கம். ஆனால், முழு மிளகாக மிதப்பது கண்டு, ராமானுஜர் வியந்தார். ஒரு நாள், இரண்டு நாள் என இது தொடர்கதையானது. ஒரு நாள், என்னப்பா இது? ஏனிப்படி முழு மிளகாகப் போடுகிறாய்? என்று கேட்டார்.
அதற்கு, அவர் உரைத்த பதில் அற்புதமானது. அழகிய கதையினை ரசிக்கும் போது நாம் நம்முடைய மதத்தின் அபிமானத்தைப் புகுத்திவிடக் கூடாது. எனவே, இங்கு நடந்த சம்பவத்தை ஒரு சரித்திரமாகவே உங்களை ரசித்திட வேண்டுகிறேன். அதாவது, வைஷ்ணவர்கள் மறந்தும் புறந்தொழா மாந்தர்கள். இதற்கு, பதிவ்ரதா தர்மம் என்று பெயர். கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும், கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போன்று, எம்பெருமாளைத் தவிர்த்து, வேறு எவரையும் வழிபட மாட்டார்கள். இது, அவர்களின் தர்மம், இதில் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. சோழ அரசன், கூரத்தாழ்வான் சரித்திரங்களில் இவற்றைக் காணலாம். தற்போது மிளகாழ்வான் கதையிலும் இத்தகையதொரு சுவாரஸ்யம் உண்டு. ராமானுஜர் கேட்ட கேள்விக்கு மிளகாழ்வானின் பதில் மிகவும் முக்கியமானது. மிளகினை ஏன் பொடித்துப் போடவில்லை என்பது கேள்வி. அதற்கு அவர் பதிலுரைத்தார், சுவாமி மிளகைத் தூளாக்கும் எண்ணம் அடியேனுக்கில்லை.
ஏன்? ராமானுஜர்.
அதைத் தூளாக்கும் இயந்திரத்தின் வடிவம் சரியில்லை -மிளகாழ்வான்.
அப்படியா? அந்த சாதனத்தில் ஏதாவது கோளாறா? - ராமானுஜர்.
இல்லை சுவாமி. அதன் வடிவமைப்பு எனக்கு சிவ லிங்கத்தை நினைவுறுத்துகிறது. வைஷ்ணவர்களாகிய நமக்கு, அது தேவையில்லை என்பதால் மிளகினை பொடி ஆக்காமலேயே சேர்த்தேன் என்றார்.
இதனை மாற்று மதத்தின் தூஷணமாக நினைக்கூடாது. ஏனெனில், வணங்கும் துறைகள் பலபல எனும் ஆழ்வாரின் வாக்கின்படி அவரவர்க்குரிய தெய்வத்தை வணங்குவது அவரவர் சம்ப்ரதாயம். தம் சம்ப்ரதாயத்தின் மேன்மையை விளக்குவது பெருமை. மிளகாழ்வானின் எண்ணப்படி ராமானுஜரின் மடைப்பள்ளியினுள் சிவலிங்கத்தின் வடிவிலான ஒரு பொருள் இருப்பதை அவர் விரும்பவில்லை. இவ்விதம் முழு மிளகினையும் சேர்த்த காரணத்தினால் அவருக்கு மிளகாழ்வான் என்றே திருநாமம் உண்டானது.
அதேபோன்று, வடுகநம்பிகள் எனும் ஆந்த்ர பூர்ணரும் பக்தியில் சிறந்தவர். ராமானுஜரின் சரித்திரத்தை முதன் முதலில் சுலோக வடிவில் எழுதியவர் இந்த வடுக நம்பிகளேயாவார். இவர் ஒரு முறை. எம்பெருமானாராம் ராமானுஜருக்கு பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். உள்ளே அடுப்பினில் பால் பொங்கிக் கொண்டிருக்கிறது. அதேநேரம் மடத்தின் வாசலில் பெருமாள் எழுந்தருளினார். ரங்கநாதனுக்கு தினந்தோறும் திருவிழாதானே, ராமானுஜர் ஏனைய சிஷ்யர்களுடன் மடத்தின் வாயிலுக்கு வந்து பெருமாளை சேவித்துக் கொண்டிருக்கிறார். எல்லோரும் வந்து பெருமாளை சேவிக்கின்றனரா என்பதையும் ராமானுஜர் பார்த்தார். உள்ளிருந்து வடுகநம்பிகள் வர வில்லையென்பது தெரிந்தது. ராமானுஜர் உள் திரும்பி, வடுகா! வடுகா! விரைந்து வா! பெருமாள் எழுந்தருளுகிறார் பார்? என்றார். ஆனால் வடுக நம்பிகளோ வரவேயில்லை. அதற்குள்ளாக பெருமாள் மடத்தைத் தாண்டியும் எழுந்தருளிவிட்டார்.
பின்னர், உள்ளே சென்ற ராமானுஜர், வடுகா! என்னவிது? பெருமாளை சேவிக்க வரவில்லையே என்றார். அதற்கு வடுக நம்பிகள், சுவாமி உமது பெருமாளை சேவிக்க நான் வந்தால் எனது பெருமாள் பட்டினியாக இருப்பாரோ! அதனால் வரவில்லை என்றார். அதாவது, ரங்கநாதனை சேவிக்க வந்தால் ராமானுஜருக்கு வைத்த பால் பொங்கி அடுப்பினில் வழிந்து விடும். இதனால், ராமானுஜர் பட்டினி கிடக்க நேரிடும். எனவே, தனக்கு ஆசார்ய கைங்கர்யம்தான் முக்கியம் என்பதை வடுக நம்பிகள் காண்பிக்கிறார். பெருமாளைவிட ஆசார்யன் உயர்ந்தவர் என்பதற்கு மற்றொரு நிகழ்ச்சியும் வடுக நம்பிகள் வாழ்க்கையில் உண்டு. ஒரு சமயம் வெளியூர் ஸஞ்சாரம் செய்வதற்கு ராமானுஜர் புறப்பட்டார். அவரின் பெருமாள், திருவா ராதன பாத்திரங்கள் என அனைத்தையும் ஒரு பையில் எழுந்தருளப் பண்ணினார் வடுக நம்பிகள். பின்னர், மறுபடியும் ஒரு மூட்டையை அதில் வைத்தார். அது கண்டு, ராமானுஜர், வடுகா! இதுவென்ன? என்றார்.
இது என் பெருமாள் வடுகன். அதா....வது? ராமானுஜர். ராமானுஜரின் பாதுகைகள் இவை, என்றவுடன் ராமானுஜர் துணுக்குற்று, வடுகா, என்னவிது விபரீதம். என் பாதுகைகளை பெருமாளுடன் சேர்க்கிறாயே? என்றார். சுவாமி தங்களின் பெருமாளுக்கு என் பெருமாள் துளியும் குறைந்தவரல்லர் என்றார் வடுக நம்பிகள். அதாவது, உமக்கு பெருமாள் எவ்வளவு முக்கியமோ, அதே போன்று எனக்கு ராமானுஜபாதுகை முக்கியமானது என்பது இதன் பொருள்.