நாளை நவராத்திரி இரண்டாம் நாள் (செப் .22) வழிபாடு
 நாளை (செப் .22ல்) மதுரை மீனாட்சியம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். குமரகுருபரர் குழந்தையாக இருந்த போது, மூன்று வயது வரை பேச்சுத்திறன் அற்றவராக இருந்தார். பின்னர் திருச்செந்துார் முருகனருளால் குறை நீங்கப்பெற்றார். இதைக் கேள்விப்பட்ட மதுரை மன்னர் திருமலைநாயக்கர், அவரை மதுரைக்கு வரவழைத்தார். முருகனின் தாயான மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடும் படி கேட்டுக் கொண்டார். மீனாட்சிபிள்ளைத்தமிழைப் பாடிய குமரகுருபரர், ஊசல் பருவத்தில் அம்மன் ஊஞ்சலில் ஆடும் அழகை வியந்து போற்றியுள்ளார். ஊஞ்சலில் ஆடும் மீனாட்சியை தரிசித்தால் கவலை நீங்கும். மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கும்.
நைவேத்யம்: தேங்காய்சாதம், பழவகைகள், பாசிப்பயறு சுண்டல்
பாட வேண்டிய பாடல்
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே.