கங்கையம்மன் ஜாத்திரை விழா
ADDED :2717 days ago
திருத்தணி : திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் ஊராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில், ஜாத்திரை திருவிழா, நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை, 9:00 மணிக்கு, எல்லையம்மன் மற்றும் தேசம்மன் கோவில் வளாகத்தில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தேசம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, பூ கரகம் ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தன. இரவு, 7:30 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், இரவு, 8:00 மணிக்கு, பூ கரகத்துடன் கங்கையம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 9:30 மணிக்கு பெண்கள் கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தன.